பெண்களின் பாரிய பிரச்சினைகள்! - சந்திரகெளரி சிவபாலன் -
பெண்களின் பிரச்சினைகள் பல இருந்தாலும் பெண், ஆண், திருமணம் ஆகிய மூன்றும் பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. முதலாவதாகப் பெண்கள் தம்முடைய பலத்தைத் தாம் அறிந்து கொள்ளாமையும், தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசமும் பெண்களுக்குப் பாரிய பிரச்சினையை சமூகத்தில் ஏற்படுத்துகின்றன.
பெண்கள் பலம்:
ஆண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முடிவதில்லை. பெண்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்யக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். ஆண்களுக்கு மொழி மையத்தின் அளவும்; சிறிதாக இருப்பதாலே ஆண்கள் பேசுவது குறைவாகவே இருக்கின்றது. நிஜமாக ஆண்களுக்கு சமய சந்தர்ப்பம் அடைந்து சாமர்த்தியமாக பேசவும் தெரியாது. முகக்குறிப்புகளையும் இலகுவில் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், பெண்கள் இவ்விடயங்களில் சாமார்த்தியசாலிகள். அதேபோல் இதைவிட ஒரு விடயத்தை அவதானித்தல், மனநிலை, கவலை போன்றவற்றை வெளிப்படுத்தல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் ஆண்களின் மூளையை விடப் பெண்களின் மூளையே தெளிவாகச் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள். இதை அறியாத பெண்கள் யாரையாவது எதிர்பார்க்கின்ற தன்மையும் பாதுகாப்புக்காக ஏங்குகின்ற தன்மையும் உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
„நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையும்“
என்று பாரதியார் பெண்களைப் பற்றிப் பாடியிருக்கின்றார். ஞானம் என்பது பற்றி ஆறுமுகநாவலர் சொல்லும் போது பகுத்தறிவுச் சுடர் என்கிறார். ஆகவே பெண்களிடம் பகுத்தறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது என்னும் போது எதையும் பாகுபடுத்தி நல்லவை தீயவை பற்றி அறிகின்ற அறிவு அவளுடைய வாழ்க்கையின் பாதுகாப்புக்குப் போதுமானது.