இளைஞர்களே! நீங்கள் தடுமாற்றம் இல்லாமல் போராடினால் வெற்றி நிச்சயம்! - பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து ) -
* ஓவியம் - AI
பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர்.
19 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைவருமே இளையோர் தான். அது மட்டுமல்லாமல்; துடிப்புடன், பயம் என்பதே இல்லாமல் பல எதிர்ப்புகளையும் தாண்டி முழு ஆற்றலுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பவன் இளைஞன். இத்தகைய மனபலத்தையும் ஆற்றலையும் படைத்த இளைஞன் இன்று தன்னை அறியாமலேயே நாகரிகம், வாழ்க்கை சூழ்நிலை போன்ற காரணங்களால் தன்னையே அழித்து, தன் வாழ்வையே கேள்விக்குறியான ஒன்றாக மாற்றி வருகின்றான்.
இளைஞர்கள் தடுமாறும் சூழல்:
இளம் வயது புதிய மாற்றம் ஏற்படும் காலம், பொதுவாக மன அழுத்தமும், கவலையும் நிறைந்த காலம் என ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை விவரிக்கிறது. இளைஞர்களால் பொதுவாக மனஅழுத்தத்தையும், கவலையையும் ஆக்கபூர்வமான விதத்தில் சமாளிக்க முடிவதில்லை. அதற்கான அனுபவம் அவர்களிடம் சிறிதும் இருப்பதில்லை. இந்த நேரங்களில் சரியான வழிநடத்துதல் இல்லை என்றால் இளைஞர்கள் எளிதாக தீய வழிதனில் சென்று விடுவார்கள்.