பகைநாட்டின் அழிவுகள்! - திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி), சிவகாசி. -
* ஓவியம் AI
முன்னுரை
முறை செய்து காப்பாற்றும் மன்னனை மக்கள் இறை என்று கருதியுள்ளனர். தன் மக்களுக்கு ஒரு துன்பம் வந்தவிடத்து, அதனைப் போக்க மன்னன் தன் உயிரையும் நீத்துள்ளான். அப்படி தன் நாட்டு மக்களைக் காக்க உயிரை நீக்கும் மன்னன், பகைமை காரணமாக பகை நாட்டில் உள்ள மக்களையும், அவர்கள் வாழும் நாட்டினையும் பல்வேறு விதமான அழிவுகளுக்கு உள்ளாக்கியுள்ளான். பகைமை காரணமாக மன்னன் பகைநாட்டிற்கு எத்தகைய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளான் என்பதனை ‘பகைநாட்டின் அழிவுகள்’ எனும் இவ்ஆய்வுக்கட்டுரையில் காண்போம்.
தோற்ற அரசனது ஆட்சிப் பகுதிகளைப் பாழ்படுத்துதல்
போரில் வெற்றி பெற்ற மன்னன் தோற்ற மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளைத் தன் நாட்டுடன் இணைத்திருக்கிறான். அது மட்டுமல்லாது வெற்றி பெற்ற மன்னர்கள் தோல்வி அடைந்த மன்னர்களின் நிலங்களைப் பல்வேறு வகைகளில் பாழ்படுத்தவும் செய்துள்ளனர். இதனை,
பகை நாட்டினைத் தன் ஆட்சிப் பகுதியுடன் இணைத்தல்
பாழ்படுத்துதல்
பகைநாட்டின் செல்வ வளத்தினைக் கவர்தல்
பகைவரின் விளை நிலங்களைக் கொள்ளையிடுதல்
நிலங்களைப் பாழாக்குதல்
பகைவர் நாட்டினை எரியூட்டல்
நீர்நிலைகளைப் பாழ்படுத்துதல்
மன்றத்தை அழித்தல்
என்ற அடிப்படையில் ஆராய இயலுகின்றது.