டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 9 - ஜோதிகுமார் -
எனது கவிதை வரிகளை அவரிடம் வாசித்து காட்டினேன்:
‘காளான்கள் இருக்கவில்லை
துவாரங்கள் மட்டுமே…
ஈரமுடன்,
காளான் மனம் வீசுவதாய்…’
‘நல்லது. மிக மிக நல்லது. நல்ல அவதானிப்பு’
திடீரென ஒரு குழிமுயல் எம்மை வெறித்து பார்த்து கொண்டிருப்பதைக் கண்டோம்.
பெரிதும் கிளர்ச்சியடைந்த அவரது கன்னங்கள் சிவப்பாய் மாறின. வாய்விட்டு கத்தினார். பின் என்னைத் திரும்பிப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார். இச்சிரிப்பானது புத்தி பூர்வமானதாகவும் மிகுந்த மனித நேயம் கலந்திருப்பதாகவும் எனக்குப் பட்டது. என் உள்ளம் அவரைக் கட்டியணைத்தது.
இன்னும் ஒரு சமயம்: வானில் ஓர் பருந்து வட்டமிட்டது. திடீரென அது அசைவின்றி நின்றது. அதனது இறக்கைகள் மெதுவாக அசைந்தன அல்லது அசையாதிருந்தன - இப்போது பாய்வதா அல்லது பொறுத்திருப்பதா என்று நின்று, நிதானிப்பது போல. டால்ஸ்டாய் அவரது கரங்களைக் கண்ணுக்கு மேல் வைத்து உற்றுபார்த்து விட்டு கூறினார்: ‘திருட்டு நாய்… கோழிகளா உன் இலக்கு… வண்டிக்காரனைக் கூப்பிடுவோம்… அவன் பார்த்துக் கொள்வான்’
வண்டிக்காரனைக் கூப்பிட்ட சத்தத்தில் பருந்து பயந்து அவ்விடத்தை விட்டு அகன்றது.