
- எழுத்தாளர் முருகபூபதி (டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா) -
கல்வி என்பது ஒரு செயல் முறையாகவும், வாழ்க்கை அனுபவம் என இருந்து, தற்போது உலகைத் தெளிவாகக் காணவும், உண்மையைத் தேடவும், பார்வையை விரிவுபடுத்திக் கொள்ளவும், நாம் மற்றோரில் தங்கியிராது சுயாதீனமடையவும் உதவுகிறது. இப்படியான கல்வியையே நாம் பெற்றோர்களாக, நம் குழந்தைகளுக்கு அளிக்க விரும்புகிறோம். ஆனால் ஏழைக் குடும்பம் ஒன்றில் தந்தை இறந்து விட்டால் என்ன நடக்கும்? குறிப்பாகப் போரின் காலத்தில்?
அத்தகைய குழந்தைகளுக்கு,ஓர் இருண்ட உலகமே காத்திருக்கிறது.
துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு இலங்கையர்கள் எப்போதும் ஆழ்ந்த அனுதாபத்தைக் காட்டி வந்துள்ளனர். 75 ஆண்டுகளுக்கும் மேலாக, நாடு முழுவதும் உள்ள மக்கள், இன்னலுக்குட்பட்டவர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டியும், அயராது உழைத்தும் வந்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடூரமான உள்நாட்டுப் போரையும், அதைத் தொடர்ந்து சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளையும், தொடர் வெள்ளப் பாதிப்புகளையும் நாம் அனுபவித்துள்ளோம்.
சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. ஒரு அளவுக்குமேல் , அவற்றின் அழிவைத் தவிர்ப்பது கடினம். ஆனால் போர் வித்தியாசமானது. போர் என்பது அரசியல் தோல்வியின் விளைவு. அரசியல்வாதிகள் நாட்டை ஆள்கிறார்கள், நாட்டை வறுமைப்படுத்துகிறார்கள், தங்களைச் செல்வந்தர்களாக்கிக் கொள்கிறார்கள். ஆனாலும் நாம், அதாவது இலங்கை மக்கள், அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். மீண்டும் மீண்டும், பெரும்பாலும் தயக்கமின்றி. நாம் அரசியல்வாதிகளை மட்டுமே குறை கூறலாமா? இது, ஒருவர் தம் வீட்டுக் கதவைத் திறந்து வைத்து விட்டு, திருட்டு நடந்த பிறகு, திருடனைக் குறை கூறுவது போன்றது.
இக்கட்டுரை எனது நண்பரின் கதையைச் சொல்கிறது. போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு ஆதரவாக 12ஆம் வகுப்பு வரை, "சிலோன் மாணவர் கல்வி நிதி" என்ற குறிப்பிடத்தக்க முயற்சியை அவர் துவக்கினார்.