
கட்டுரையாளர்: முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.
மானுட சமூகத்தின் இயங்கியல் வழக்காறுகளில் உறைகிறது எனலாம். வாழ்வியல் ஒழுகலாறுகளை அடியொற்றிய தகவமைப்பு, பண்பாடு மற்றும் மரபுநிலை போன்ற கூறுகளாலான வழக்காறுகள் மரபறிவின் திரட்சியாகும். ஒருவகையில், வழக்காறுகள் வரலாறுகளுக்கு அடிப்படையாகத் திகழ்வதையும், வரலாற்றைவிட மேலோங்கி நிற்பதையும் மறுப்பதற்கில்லை. நாட்டுப்புறவியல், மானுடவியல் போன்ற அனைத்து நிலையிலான ஆய்வுகளுக்கும், குறிப்பாக, மானுடவியல் ஆய்வுகளுக்கு அடிச்சரடாகத் திகழும் இவை பண்பாட்டின் தொகைநிலையெனலாம். அவ்வகையில், ஆயர்வாழ்வியலின் களஞ்சியமாகத் திகழும் திருப்பாவையில் இன்றும் வழக்கிலுள்ள சில ஆயர் வழக்காறுகளை இக்கட்டுரை ஆய்கிறது.
திருப்பாவையின் களம் ஆயர்பாடியாகும். அதில் ஆயர்களின் பல்வேறு வழக்காறுகள் செறிந்துள்ளன. ஆயர்ச் சமூகத்தைக் கூர்ந்த கள ஆய்வின் விளைவாக எழுந்த இலக்கியமாக இதைத் துணியலாம். அதோடு, இதில் இடம்பெறும் சில ஆயர் வழக்காறுகள் சங்கம்தொட்டு வழக்கிலிருப்பவை. அதனைச் சங்க, ஆயர்ச் சமூகத்தின் தொடர்ச்சியாகவும் அச்சமூகத்தின் நெடிய பண்பாட்டினை, மரபினை வெளிப்படுத்தும் நிலைக்களன்களாகவும் கொள்ளலாம். அவ்வகையில், ஆய்வின் எல்லைகருதி, திருப்பாவையில் இடம்பெறும் ‘சிறுவீடு’, ‘காசும் பிறப்பும்’ ஆகிய தொன்மையான ஆயர் வழக்காறுகளை நீலகிரியில் வாழ்கின்ற ஆயர்களான ‘படகர்’ இனமக்களின் வழக்காறுகளுடன் இணைத்து இக்கட்டுரை ஆய்கிறது.
படகர்கள் எனும் ஆயர்கள்
நீலகிரியில் வாழ்கின்ற படகர்கள் ஆயர்கள் என்பதை அவர்களின் ‘படகா’ எனும் பெயரே சான்றுபகர்கின்றது. ஆயர் என்பதும் ஆயர்பாடி என்பது எவ்வாறு ஆநிரை வாழ்வினைச் சுட்டுகின்றதோ அதேபோல, ‘பண்டுகா’ எனும் சொல்லிலிருந்து உருவான ‘படகா’ எனும் சொல்லும் ஆயர் வாழ்வியலை உணர்த்துகின்றது. படகர்களின் மொழியான ‘படுகு’ மொழியில் ‘பண்டா’ எனும் சொல் மந்தைகளை, குறிப்பாக எருமை மந்தைகளைக் குறிக்கிறது. எருமை மந்தைகளைப் பேணுபவர்கள், எருமை மந்தைகளை உடையவர்கள் எனும் அடிப்படையில் இவர்களின் வாழ்வியலை இப்பெயர் குறித்து நிற்கின்றது. அதற்கேற்பவே, அவர்களின் வாழ்வியலிலும் எண்ணற்ற எருமைகள் சார்ந்த வழக்காறுகள் விரவியுள்ளன. சான்றாக அவர்களின் வாழ்வியலை வரையறுக்கும் “பண்டா பதுக்கு” எனும் இணைச்சொல்லினைக் கருதலாம். இதில் ‘பதுக்கு’ எனும் சொல்லிற்கு வாழ்வு என்றும் ‘பண்டா’ என்பதற்கு ஏற்கனவே கண்டதுபோல எருமை மந்தையென்றும் பொருள். அதாவது, எருமை மந்தைகளே வாழ்வு என்பதை இது சுட்டுகின்றது.