
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே " என்பது நன்னூல் வாக்கு. இதனை பனையோலையில் எழுத்தாணியால் பதிவுசெய்தவர் பவனந்தி முனிவர் என்று சொல்லப்படுகிறது. வள்ளுவரும் கம்பரும் இளங்கோவும் அவ்வையாரும் ஏட்டுச்சுவடிகளையும் எழுத்தாணியையும் ஏந்திக்கொண்டுதான் அமரத்துவமான எழுத்துக்களைப்படைத்தனர் என்பதற்காக இந்த நூற்றாண்டின் பிள்ளைகள் பனைமரம் தேடி அலையவேண்டியதில்லை. அவர்கள் கணினியிலும் கைத்தொலைபேசியலும் தட்டிக்கொண்டிருக்கின்றனர். கைத்தொலைபேசியிலேயே சினிமாப்படங்களையும் சின்னத்திரை மெகா தொடர்களையும் விளையாட்டுக்களையும், தாம் விரும்பும் இசை, நடன நிகழ்ச்சிகள் உட்பட அனைத்தை பொல்லாப்புகளையும் முகநூல் வம்பு தும்புகளையும் பார்த்துக்கொள்ளமுடியும். இனி கையில் எடுத்து வாசிக்க புத்தகம் எதற்கு ? படம்பார்க்க தியேட்டர்தான் தேவையா? சில படங்களை அகலத்திரையில் பார்த்தால்தான் திருப்தி எனச்செல்பவர்கள் விதிவிலக்கு. தொலைக்காட்சியின் வருகை, திருட்டு விசிடியின் தீவிர ஆக்கிரமிப்பு முதலான காரணிகளினால், திரையரங்குகள் படிப்படியாக மூடப்பட்டுவருகின்றன.
இலங்கை, இந்தியா உட்பட வெளிநாடுகளில் வணிகவளாகங்களுக்குள் சிறிய திரையரங்குகள் தோன்றிவிட்டன. ஒரு வணிக வளாகத்திற்குள் பிரவேசித்தால் சின்னச்சின்ன திரையரங்குகளையும் தரிசிக்கமுடியும். மனைவியுடன் ஷொப்பிங் செல்லும் கணவன், மனைவியால் பொறுமை இழக்கும் தருணங்களில் அந்த அரங்கினுள் நுழைந்து ஏதாவது ஒரு படத்தை கண்டுகளித்துவிட்டு, மனைவி ஷொப்பிங் முடிந்ததும், பொருட்களை காவி வருவதற்கு செல்லமுடியும். இதுதான் இன்று பல குடும்பங்களில் நடக்கிறது. வெளிப்புற படப்பிடிப்புகளினாலும் காதல் காட்சிகளுக்காக தயாரிப்பாளர்கள் வெளிநாடுகளில் லொகேஷன் தேடுவதனாலும் இந்தியாவில் பல சினிமா ஸ்ரூடியோக்கள் மூடுவிழாக்களை சந்தித்தன. தமிழ்நாட்டில் பிரபல்யமான எஸ். எஸ். வாசனின் ஜெமினி, சேலம் மொடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் பல ஏக்கர் நிலப்பரப்புள்ள ஸ்ரூடியோ, சென்னை நெப்டியூன், ஏ.எல். ஸ்ரீநிவாசனின் சாரதா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கற்பகம், பானுமதியின் பரணி, நாகிரெட்டியின் விஜயா, வாஹினி, எம்.ஜி.ஆரின் சத்தியா உட்பட சில சிறிய ஸ்ரூடியோக்களும் மூடப்பட்டுவிட்டன. சென்னைக்குச்சென்றால், பஸ்பயணிகள் நடத்துனரிடம் ஜெமினிக்கு ஒரு டிக்கட் என்று கேட்டு ஏறி இறங்கும் காட்சியை காணலாம். ஜெமினிக்கு இன்று அதுதான் வாழும் அடையாளம். அந்த புகழ்பெற்ற ஸ்ரூடியோவிலிருந்துதான் மகத்தான வெற்றிப்படங்கள் ஒளவையார், சந்திரலோகா, வஞ்சிக்கோட்டை வாலிபன், ஒளிவிளக்கு என்பன வெளியாகின.