அஞ்சலி: தூரிகைகளின் வேந்தர் ஓவியர் மாருதி - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
"தூரிகைகளின் வேந்தர்" என அழைக்கப்படும் பிரபல தமிழக ஓவியர் மாருதி இன்று காலமானார். இவரின் ஓவியங்கள் வண்ணக்கலவைகளில் குளித்து பார்ப்பவர் கண்களை பரவசப்படுத்தும். இவரின் தூரிகைகள் படைக்கும் பெண் பாத்திரங்களின் சிரிக்கும் கண்கள் தனித்துவமானவை!
வெ. இரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி (28 August 1938 – 27 July 2023), ஓவியர் மட்டுமல்லாமல் ஆடை வடிவமைப்பாளரும் கூட. கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. ஓவியம் மட்டுமின்றி 'உளியின் ஓசை', 'பெண் சிங்கம்' ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணி செய்திருக்கிறார்.
இவர் புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28 அன்று டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள். வெங்கோப ராவ் ஆசிரியராக பணி செய்தார். அதனால் வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு இரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.