புத்தக வாசிப்பின் மகத்துவம்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
* ஓவியம் - AI
மொழி என்பது சமூகத்தின் விளைச்சல்களில் ஒன்று. சமூகத்தின் இயக்கத்தோடு இணைந்து மொழியும் இயங்குகின்றது. சமூக வளர்ச்சியோடு இணைந்து மொழியும் வளர்ந்தோங்குகின்றது. சமூகம் மறையும்போது மொழியும் மறைந்துவிடும். மொழியின் பரிணாம வளர்ச்சி என்பது சமூக சமூகப் பரிணாம வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். நூலகத்திலேயே மூழ்கியிருந்த கார்ல் மார்க்ஸின் நூலினை வாசித்த போது மொழியை சிந்தனையின் உடனடி வெளிப்பாடு என்று கூறுகின்றார். சிந்தனை தோன்றிய காலத்திலேயே மொழி தோன்றிவிட்டது என்றும் மொழி என்பது சிந்தனையை நடைமுறைப்படுத்துகிறது என்பதையும் நாம் உய்த்து அறிகின்றோம்.
இத்தகைய மொழியின் வெளிப்பாடுகளை நாம் நூல்களின் வழியாகவே அதிகமாகப்; பார்க்கமுடிகின்றது. இதுபோன்ற நடைமுறைகள் சமூகத்தில் இவை மிக முக்கிய அடையாளமாக திகழ்கின்றன. கல்வி வேறு அறிவு வேறு என்பதை முதலில் நாம் புரிதல் அவசியமாகின்றது. வெளியில் இருந்து உள்ளே செல்வது கல்வி. அந்தக் கல்வியைப் பயன்படுத்தி உள்ளிருந்து வெளியில் வருவதுதான் அறிவு என அனுபவ வாயிலாக உணர்வதை நாம் அவதானிக்கலாம்..
புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பதுபோல எனக் கூறலாம். புத்தகம் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப்போகும். வாசிப்பு என்பது மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடும். புத்தக வாசிப்பு என்பது மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும். அதிகமான அறிஞர்கள் புத்தக வாசிப்பினால்த் தான் உலகில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகின் தலைசிறந்த அறிஞர்களாகத் திகழ்கின்றார்கள் அந்த வகையில் உலகில் உயர்ந்த மனிதர்கள் சிலரைக் குறிப்பிட்டு இங்கே கூறுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.