பயணத்தொடர்: வட இந்தியப் பயணம் (1) - - நோயல் நடேசன் - -
- இந்தியா வாயில் (India Gate) -
இந்த (2023) வருடம் மார்ச்சில் புது டில்கி போயிருந்தபோது முன்னைய வாலிப காலத்துப் பயணம் நினைவுகள் சிறகடித்தது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு( 1985) முன்பாக போயிருந்தேன். அப்பொழுது சித்திரை மாதம். கோடை வெயில் காலம். அக்காலத்தில் மெட்ரோ ரயில் இல்லை. ஓட்டோவும் நடராசாவுமே. சூரியன் தலைக்கு நேரே வந்து எங்கள் மேல் தரையிலும் தலையிலும் எரிதணலைக் கொட்டியதுபோல் இருந்தது. நடக்கும்போது சிறுவயதில் எங்களது ஊரில் கோவிலின் முன்பாக பார்த்த தீ மிதிப்பு நினைவுக்கு வரும். டெல்லித் தெருவில் தீ மிதித்தபடி நடக்கும்போது அடிக்கடி கரும்புச் சாறு, மிளகுத் தண்ணீரென குடித்தபடி நண்பன் விசாகனோடு நடந்தேன்.
இறுதியில் மாலையில் நாங்கள் தங்கிய மாடிக் கட்டிடம் உள்ளே சென்றபோது செங்கல்லைச் சூடாக்கும் சூளைபோல் நெருப்பாகக் கொதித்தது. புகை வராததுதான் மிச்சம்! அக்காலத்தில் கட்டிடங்களில் அதிகம் ஏர் கண்டிசன் வசதிகள் இருக்கவில்லை. நாங்கள் நின்ற வீட்டின் பகுதியில் புல்லால் ஆன யன்னல் தட்டியில் நீர் வந்து சிதறி அறையை குளிராக்கும் ஒரு விசித்திர பொறிமுறையை அமைத்திருந்தார்கள். அதில் பட்டு வரும் காற்றின் மூலம் அறையின் வெப்பம் குறைய வேண்டும். ஆனால் நாங்கள் நின்ற அன்று அந்தப் பொறிமுறை வேலை செயதாலும் வெப்பத்தில் மாற்றமில்லை. வேலை செய்த ஃபான் தொடர்ந்து அக்கினி கலந்த காற்றை உள்ளே சுமந்து வந்தது. தரை, கட்டில், மேசை எல்லாம் கொதிநிலையிலிருந்தன. எப்படி இரவில் படுத்து உறங்குவது என்ற சிந்தனையின் இறுதியில் இரண்டு வாளி நீரை சீமந்து தரையில் ஊற்றிவிட்டு அதன்மேல் கம்பளத்தை விரித்துப்படுத்தோம்.